எந்த ஒரு நிறுவனமாயினும் – வணிகம் சார்ந்த அல்லது சாராத நிறுவனங்கள் எவையானாலும் – ஒரு கருத்து உருப்பெறுவது எப்போதும் மேலிருந்துதான். மேலே தொடங்கி அது மெது மெதுவாகக் கீழ் நோக்கிப் பரவுகி றது. ஒவ்வொரு அடுக்கைக் கடக்கும் போதும் அது, அந்தந்த அடுக்கில் இருப்போரின் தன்மையை உறிஞ்சிக் கொண்டு அங்கங்கே சிறிதளவு மாற்றம் பெறுகிறது. It simply percolates. ஆனால், அதன் அடிப்படைத் தன்மை மாறுவதில்லை. எனவேதான், மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தக் கூடிய முடிவுகளை எடுப்பதற்காகக் கூட்டப்படும் கூட்டங்களில், இடமறிந்து பேசக் கூடிய நிறுவனத் தலைவர்கள் எடுக்கப் போகும் முடிவில் தங்களுடைய கருத்து என்ன என்பதை வெளிப்படையாகச் சொல்ல மாட்டார்கள். தன் வி ருப்பம் இன்னது என்று தெரியுமானால், அது வெளியிடப்படும் கருத்துகளின் தன்மையைப் பெரிதும் பாதிக்கும் என்பதை உணர்ந்தே அவ்வாறு செய்வார்கள்.
‘இப்படி ஒரு செயலை மேற்கொள்ளப் போகிறோம். இதனால் நன்மை ஏற்படும் என்று நினைக்கி றீர்களா, அல்லது தீமை ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?’ என்று ஒரு நிறுவனத் தலைவர், தன் கீழ் பணி யாற்றும் பல்வேறு துறைத்தலைவர்கள் கூடியிருக்கும் ஒரு கூட்டத்தில் கேட்பதாக வைத்துக்கொள்வோம். கருத்துகள் எந்தவிதத் தயக்கமும் இன்றி சரளமாக வெளிவரும். ‘இதனால் ஏற்படப் போவது நன்மையா, தீமையா என்று ஆய்ந்து சொல்லுங்கள். நன்மை ஏற்படும் என்றே நான் கருதுகிறேன்,’ என்று தன்னுடைய கருத்தை நிறுவனத் தலைவர் தொடக்கத்திலேயே தெரிவித்துவிட்டார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது என்ன நடக்கும்? தெளிவும், உறுதியும் உள்ளவர்கள் மட்டும்தான் அதற்கு மாற்றுக் கருத்து ஏதும் உண்டெனில் அதனை வெளியி டுவார்கள். மற்றவர்களிடமிருந்து வரவேற்பு மட்டும்தான் கிடைக்கும். ஏனெனில், இது நிறுவனத் தலைவருக்கு உகந்த கருத்து. இதை ஆதரித்து மட்டும்தான் பேசுவது நல்லது என்றொரு எண்ணம் தொடக்கத்திலேயே ஊ ன்றப்பட்டுவிடுகிறது. நிறுவனத் தலைவருடைய தன்மையையும், கருத்துச் சுதந்திரத்தை அவர் ஊக்குவிக்கும் போக்கையும் சார்ந்து இந்த நிலையில் சற்றே மாற்றம் தோன்றலாம். ஆனாலும், அவருடைய கருத்து இன்னது என்று தெரிந்த பின்னர் அதற்கு மாற்றுக் கருத்து சொல்லப் பெரும்பாலானவர்களுக்குத் தயக்கமே ஏற்படும்.
இந்தப் பின்புலத்தோடு வீடணன் அடைக்கலப் படலத்தில் இராமன் எடுக்கப் போகும் முடிவு விவாதிக்கப் படும் வி தத்தை அணுகினால், இராமன் எப்படிப்பட்ட தேர்ச்சிபெற்ற நிர்வாகி என்பது புலனாகும். இந்தக் கட்டம் வால்மீகி இராமாயணத்தில் விவரிக்கப்படும் விதத்திலிருந்து பெரிதும் வேறுபடுகிறது கம்ப இராமாயணத்தி ல். மிக இயல்பான உரையாடலாக வால்மீகி விவரிக்கும் இந்த – வீடணனை ஏற்கலாமா, வேண்டாமா – வி வாதம் கம்பனுடைய கைகளில் ஒரு காலை-நேர-வர்த்தகக்-கூட்டம் – a breakfast business meeting – எவ்வளவு சீராக, ஒரே போக்கில் இயங்கும் தன்மையுடன் விறுவிறுவெனச் சுழன்று இயங்குமோ அவ்வாறு இயங்குகிறது.
அடைக்கலம் நாடி வரும் வீடணன், இராமனுடைய முன்னிலைக்கு வந்து சேரும் விதமே கம்பனில் முற்றிலும் வேறுபடுகிறது. சுக்ரீவனாலும் மற்ற வானரங்களாலும் எதிர்கொள்ளப்பட்டு, இவனை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்று ஒவ்வொருவர் ஒவ்வொருவிதத்தில் – ஆனால் ஒவ்வொருவரும் ‘வேண்டாம்’ என்ற கருத்தையே வலியுறுத்திய பிறகு – அனுமன்,
ந வாதான் ந அபி ஸம்கர்ஷான் ந ஆதிக்யான் ந ச காமதா வக்ஷ்யாமி வசனம் ராஜன் யதா அர்த்தம் ராம கெளரவாத்
என்று தன் உரையைத் தொடங்குகிறான். (வா. இரா. யுத்த காண்டம், சர்க்கம் 17, சுலோகம் 52). ‘இராமா! அரசனே! நான் வாதம் செய்வதற்காகவோ, (மற்றவர்கள் தெரிவித்த கருத்துக்கு எதி ர்க்கருத்தாகவோ அல்லது) போட்டிக்காகவோ, மற்றவர்களைப் பார்க்கிலும் சிறந்தவன் என்று நிலைநாட்டிக் கொள்ளவோ, அல்லது ஒரு பக்கமாகச் செலுத்தப்படும் வேட்கை உணர்வினாலே இவ்வாறு பேசவில்லை. நம்முடைய (விவாதத்துக்கு உரித்தான) இந்த விஷயத்தின் முக்கியத்துவம் கருதியே பேசுகிறேன்.
என்று தொடங்கி, ஏன் வீடணன் ஏற்றுக்கொள்ளத் தக்கவன் என்று விவரித்த பிறகு இராமனுடைய உரை தொடங்குகிறது.
மமாபி து விவக்ஷ¡ அஸ்தி காசித் ப்ரதி விபீஷணம் ஷ்ருதம் இச்சாமி தத் ஸர்வம் பவத்பி ஷ்ரேயஸி ஸ்திதா (மேற்படி, சர்க்கம் 18, சுலோகம் 2)
விபீஷணனைப் பற்றிய என் கருத்தை நானும் சொல்ல விரும்புகிறேன். நம்முடைய நலத்தை நாடுவதில் கருத்தூன்றியுள்ள நீங்கள் அனைவரும் கேட்கவேண்டும் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு தொடங்கும் இராமனின் உரை, ‘அடைக்கலம் நாடி வந்தவனை ஏற்கத்தான் வேண்டும்,’ எனத் தொடர்ந்து, வீடணனை ஐயுற்றுப் பேசும் சுக்ரீவனுக்கு, ‘அது பிசாசாயினும் சரி; அரக்கனாயினும் சரி; யட்சனாயினும் சரி. எனக்குத் தீங்கிழைக்க யாராலும் முடியாது. ‘அங்குலி அக்ரேண தான் ஹன்யாம் இச்சான் ஹரி கணா ஈஷ்வர,’ (மேற்படி, சுலோகம் 23 முன் பாதி) நான் விரும்பினால், வானரக் கூட்டங்களி ன் தலைவனே, என் விரல் நுனியால் கொல்வேன்,’ என்று அறுதியிட்டுச் சொல்வது வரை செல்கிறது. Rama gets assertive, if not a bit aggressive.
வால்மீகியின் விவரிப்பும் சரி; கம்பனின் விவரிப்பும் சரி. ஒவ்வொன்றும் ஒவ்வொரு பின்னணியை உடையவை. வால்மீகியின் சுக்ரீவன், இராமனுக்கு நண்பன். கம்பனின் சுக்ரீவன், இராமனிடத்தி ல் அடைக்கலம் புகுந்தவன். இந்த வேற்றுமையைக் கவனத்தில் இருத்தினால்தான், கம்பன் ஏன் இந்த இடத்தில் தன் சித்திரத்தை வேறுபடுத்திக் காட்டுகிறான் என்பது புலனாகும். இராமன் என்னும் அரசனிடத்திலே (சரி, அரசு துறந்திருக்கும் அரசனிடத்திலே) சுக்ரீவன் என்னும் அரசன் பேசுகின்ற விதமும், இராமன் என்ற அரசு துறந்திருக்கும் அரசனிடத்தில் அடைக்கலம் புகுந்தவனான சுக்ரீவன் பேசும் விதமும் ஒன்றே போல் இருக்க முடியாது. இந்த வேறுபாடுகளை வீடணன் பாத்திரத்தை ஆயும் போது விரிவாகப் பார்ப்போம். இவற்றைப் பேச இது இடமில்லையாயினும் இராமன்-சுக்ரீவன் உறவு முறையில் தான் செய்திருக்கும் இந்த மாறுதலைத் தொடர்ந்து, எந்தெந்த இடங்களில் என்னென்ன மாறுதல்களைச் செய்ய வேண்டும் என்பதையும்; எவ்வாறு இழைத்தால் – இழைத்தால் மட்டுமே – நாடகத்தின் இயல்பான ஓட்டமும், பாத்திரப் படைப்பின் தன்மையும் கெடாமல் இருக்கும் என்பதை ஆழ்ந்து சிந்தித்துக் காட்சிகளை அமைத்திருக்கும் கம்பனென்ற கவிகளுக்கெல்லாம் கவியை வியக்காமல் இருக்க முடியவில்லை.
நண்பர்களுக்கிடையில் நடக்கும் உரையாடலாக வால்மீகி தீட்டிய சித்திரத்தின் சில தீற்றல்களை மட்டும் நம்முடைய தற்போதைய தேவைக்கான அளவு எடுத்து வைத்தேன். இப்போது கம்ப சித்திரத்தின் பக்கம் தி ரும்புவோம்.
அனுமனால் அனுப்பப்பட்ட மயிந்தன்-துமிந்தன் ஆகிய இருவரும் வீடணனையும், அவனோடு கூட வந்தி ருக்கும் அனலன், அனிலன், அரன், சம்பாதி ஆகிய – இராவணனின் போக்கை வெறுத்த – நான்கு அரக்கர்களையும் (நால்வரும் இராவணனின் அமைச்சர்களாக விளங்கியவர்கள்; வீடணன் முதன்மையான அமைச்சன்) சந்தித்துப் பேசி, அவர்கள் நோக்கத்தை அறிந்து, அவர்களை தனி யாக அமரவைத்துவிட்டு, இராமனிடத்தில் வந்து செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள். வீடணனுடைய நோக்கம் இன்னது என்பதை உரைக்கிறார்கள். இராமனைச் சுற்றிலும் வானர, கரடித் தலைவர்கள் நிற்கி றார்கள். வால்மீகியில் நிகழ்வது போன்ற உரையாடல் எதுவும் இல்லை. தன்னைச் சுற்றி ஒரு பார்வை பார்க்கிறான் இராமன்.
அப்பொழுது இராமனும் அருகில் நண்பரை, ‘இப் பொருள் கேட்ட நீர் இயம்புவீர். இவன் கைப்புகற்பாலனோ, கழியற்பாலனோ – ஒப்புற நோக்கி, நும் உணர்வினால்’ என்றான்.
இதோ (மயிந்தன்-துமிந்தன் ஆகிய) இந்த இருவரும் சொன்னதை எல்லோரும் கேட்டீர்கள். உங்களுடைய மதி நுட்பத்தால் ஆய்ந்து சொல்லுங்கள். (நம்மை நாடி வந்திருக்கும் வீடணனாகிய) இவன், அடைக்கலமாக ஏற்றுக்கொள்ளத் தக்கவனா, அப்புறமாகத் தள்ளத் தக்கவனா?
இந்தக் கூட்டம் முடியும் அளவிலும் இராமன் பேசுவது இந்த இரண்டே வாக்கியங்கள்தாம். ‘இவன் ஏற்றுக் கொள்ளத்தக்கவனா இல்லையா என்பதை உங்கள் மதி நுட்பத்தால் ஆய்ந்து எனக்குச் சொல்லுங்கள்.’ கவனி யுங்கள். இராமன், தன் கருத்து இன்னது என்பதைத் தெரிவிக்கவில்லை. தேர்ந்த நிர்வாகிகள் எவ்வாறு தம் கருத்தை மறைத்துக்கொண்டு, மற்றவர்கள் சரளமாகவும், தயக்கமின்றியும் தங்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவி க்க வழி ஏற்படுத்திக் கொடுப்பார்களோ அவ்வாறு இரண்டே வாக்கியத்தில் தன்னுடைய தொடக்க உரையை முடித்துக் கொள்கிறான். அதைத் தொடர்ந்து, ஒவ்வொருவராக எழுந்து தங்களுடைய கருத்துகளைத் தெரிவி க்கும்போது குறுக்கிட்டுப் பேசுவதோ, ‘நான் விரும்பினால் என் ஒற்றை விரல் நுனியால் எவனாக இருந்தாலும் கொல்வேன்,’ என்பன போன்ற உணர்ச்சி மிகுந்த வாக்கியங்களைச் சொல்வதோ இல்லை. முற்ற முழுக்க அமைதியாக இருந்து மற்றவர்களைப் பேச அனுமதிக்கிறான் என்பது நோக்கத்தக்கது. (ஆயின், வால்மீகியின் சித்திரம் குறைவுபட்டதென்று சொல்லப் புகுந்தேனல்லன். நாம் மேலே சொன்னபடி, அதன் பி ன்னணி வேறு; இங்கே கம்பன் விவரிப்பின் பின்னணி வேறு.)
இந்தக் கூட்டத்தில் சுக்ரீவனின் முதல் உரை, வால்மீகியை ஒட்டியே அமைகிறது. அங்கே,
சுதுஷ்டோ வாப்யதுஷ்டோ வா கிமமேஷ ராஜனீசர ஈத்ரீஷம் வ்யாஸானம் ப்ராப்தம் ப்ராதாரம் ய பரித்யஜேத்
கோ வாம ச பவேத்தஸ்ய யமேஷ ந பரித்யஜேத் (வா. இரா. யுத்த காண்டம், சர்க்கம் 18, சுலோகம் 5 மற்றும் 6 முன்பாதி)
இந்த அரக்கன் துஷ்டனாகட்டும், இல்லாமல் போகட்டும். (அதைப் பற்றி என்ன?) தன் அண்ணனையே ஒருவன் புறக்கணித்தான் (காட்டிக் கொடுத்தான்) என்றால் மற்ற யாரை அவன் புறக்கணிக்க மாட்டான்?
என்று எவ்வாறு பேசுகிறானோ அவ்வாறே கம்பனின் சுக்ரீவனும் பேசுகிறான்.
‘வெம்முனை விளைதலின் அன்று; வேறு ஒரு சும்மையான் உயிர் கொளத் துணிதலால் அன்று; தம்முனைத் துறந்தது, தரும நீதியோ? செம்மை இல் அரக்கரில் யாவர் சீரியோர்?
அண்ணனை இவன் ஏன் விட்டு நீங்கினான்? அதற்குக் காரணம் என்ன? அவன் என்ன இவனோடு போர் தொடுத்தானா? இல்லையென்றால் பாரமான (பாறைகளை) இவன் மீது வீசிக் கொல்லக் கருதி னானா? அவ்வாறு செய்யாத போது இவன் அண்ணனைத் துறந்தது ஏன்? அரக்கரில் நல்லவர் என்று ஒருவர் உண்டா?
‘வார்க்குறு வனை கழல் தம்முன் வாழ்ந்த நாள், சீர்க்கு உறவாய், இடைச் செறுநர் சீறிய போர்க்கு உறவுஅன்றியே போந்தபோது, இவன் ஆர்க்கு உறவு ஆகுவன், அருளின் ஆழியாய்!
வீரக் கழலை அணிந்த இராவணன் வாழ்ந்த காலத்தில் அவனோடு சேர்ந்து வாழ்ந்துவிட்டு, அவனுடன் அத்தனை இன்பங்களையும் துய்த்துவிட்டு, இடையில் போர் மேற்கொண்டு பகைவர் வந்த போது அண்ணனுடன், அவனுடைய போருக்கு உறவாகாமல், பகைவரிடம் வந்து தஞ்சம் புகுவானானால், இவன் யாருக்குத்தான் உறவாக முடியும்?
Faux pas என்று சொல்வார்கள். தவறான, ரசக்குறைவான நடத்தை. அதுவும் பொது இடத்தில்; எல்லோருக்கும் முன்னிலையில். சுக்ரீவர் இவ்வளவு தூரம் வரிந்துகட்டிக் கொண்டு, ‘அண்ணனை விட்டு நீங்கிய வீடணனை,’ இடக்காகப் பேசிக்கொண்டு வரும்போது, ‘நீ என்ன செய்தாய்?’ என்றொரு கேள்வி எழ இடமி ருக்கிறது என்பதனை உணரவில்லை. அதற்கும் ஒரு வரம்பு கட்டிக்கொள்கிறான் கம்பனின் சுக்ரீவன். ‘அவனென்ன சண்டை போட்டானா? பெரிய பாறைகளை வீசிக் கொல்ல நினைத்தானா?’ என்று அவன் எழுப்பும் கேள்வியில் ‘எங்க அண்ணனாவது அதையெல்லாம் செய்தான்,’ என்ற செய்தி மறைமுகமாக வெளிப்படுகிறது. இருந்த போதிலும், சுக்ரீவனுடைய பேச்சைக் கேட்கும் போதே சிறிய புன்னகை செய்துகொள்வதைத் தவிர்க்க முடியவில்லை.
ஒருவருடைய கருத்துக்கும் மறுமொழி ஏதும் சொல்லாமல் – ஏன், முகக் குறிப்பாலும் தன் உள்ளத்தில் தோன்றுவனவற்றை வெளிக்காட்டாமல் – அடுத்தது, அடுத்தது என்று ஒவ்வொருவராக இராமன் அழைக்க, ஒவ்வொருவரும் சுக்ரீவனின் கருத்தையே ஒட்டிப் பேசுகிறார்கள். இவர்களில் நீலனுடைய பேச்சு கவனிக்கத் தக்கது. ‘எதிரியின் பக்கத்திலிருந்து யார் யாரை நம் பக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம்,’ என்று இலக்கணம் சொல்கிறான் நீலன். நீலனுடைய இந்தப் பேச்சும், சன் த்சுவின் Art of War இதைக் குறித்துச் சொல்லும் இலக்கணமும் மிக நெருக்கமாக ஒத்துப் போவதைக் காணலாம். இவையெல்லாம் விரிவாக நோக்கத் தக்கன. பின்னால், உரிய இடத்தில் காண்போம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொன்னாலும், வீடணனை ஏற்பதை யாரும் விரும்பவில்லை என்ற கருத்தைச் சுற்றியே – வான்மீகத்தைப் போலவே – அனைவரின் பேச்சும் சுழல்கிறது.
அனைவரும் பேசி முடிக்கும் வரையில் அனுமன் அமைதியாக இருந்தான். இது வான்மீகம் காட்டும் சித்தி ரத்தைத் தலை கீழாக மாற்றி அமைத்த அனுமனின் குணசித்திரம். அங்கே அனுமன்தான் வீடணனை ஏற்பது பற்றி பேசப் புகுந்து, உரையாடலைத் தொடங்கி வைக்கிறான். இங்கே, அனுமனின் உரையே கடைசி உரை. அதாவது தலைவரின் முடிவுரைக்கு முந்திய உரை. இராமன் தன்னை அழைத்துப் பேசச் சொல்லும் வரையில் அசையாமல் இருக்கிறான் அனுமன். ஒரு கருத்தரங்கம் நடைபெறும்போது காட்ட வேண்டிய பெரிய பண்பு இது. நிறுவனங்கள் நடத்தும் வாராந்தர, மாதாந்திரக் கூட்டங்களிலும், தேர்ந்த நலம் பொருந்தி யவர்கள் இப்படிப்பட்ட பண்பை வெளிக்காட்டுவதைக் காணலாம். தன் முறை வரும்வரையில் அமைதியாகக் காத்தி ருத்தலும், அடுத்தவர் பேசும்போது குறுக்கிடாமல் இருத்தலும் ஒவ்வொரு நிர்வாகியும் இத்தகைய தருணங்களில் மேற்கொள்ள வேண்டிய ஒன்று. இராமனும் சரி; அனுமனும் சரி, இந்த விதியை மிகத் துல்லியமாக அனுசரி ப்பதைக் காண்கிறோம். எல்லோரும் முடித்தார்கள். கடைசி கடைசியாக அனுமனைப் பார்த்தான் இராமன்.
‘உறு பொருள் யாவரும் ஒன்றக் கூறினார் செறிபெருங் கேள்வியாய்! கருத்துஎன், செப்பு’ என, நெறி தரு மாருதி என்னும் நேர்இலா அறிவனை நோக்கினான், அறிவின் மேல் உளான்.
அறிவினால் போய் எட்டித் தொட முடியாதவனாகிய (முழு முதலான) இராமன், ‘பெரிய கல்வி கேள்விகளை உடையவனே, ஆஞ்சநேயா! நாம் இப்போது செய்யத்தக்கது என்ன என்பது பற்றி எல்லோரும் தங்கள் தங்கள் கருத்துகளைச் சொல்லிவிட்டார்கள். உன் கருத்து என்ன? (ஏன் வாய் மூடி இருக்கிறாய்?) சொல்,’ என்றான்.
‘இவ்வளவு பேர் பேசிவிட்ட பிறகு நான் சொல்ல என்ன இருக்கிறது?’ என்ற படி எழுந்தான் மாருதி.
‘எத்தனை உளர், தெரிந்து எண்ண ஏய்ந்தவர், அத்தனைவரும், ஒரு பொருளை, “அன்று” என, உத்தமர், அது தெரிந்து உணர, ஓதினார்; வித்தக! இனி, சில விளம்ப வேண்டுமோ?
இவ்வளவு உத்தமமான அறிவுடைய (இந்தக் கூட்டத்தில் பேசிய) பெருமக்கள் எத்தனைப் பேர் இருக்கிறார்கள்! எவ்வளவு ஆழமாகவும், நுட்பமாகவும் தெரிந்து எண்ண வல்லவர்கள் எல்லோரும்! அத்தனைப் பேரும், ‘இது ஏற்கத் தகுந்தது அன்று, ‘ என்று உத்தமமானவர்களாகச் சொன்னார்கள். சொல்வதை மனம் கொள்ளுமாறு, உணருமாறு சொன்னார்கள். இதற்கு மேலும் நான் சொல்ல வேண்டுமோ?
எல்லோரும் சொன்ன கருத்துக்கு எதிர்க் கருத்து சொல்லும் முன்னால், அவைக்குச் சொல்லும் முகமன். ‘உங்கள் எல்லோருடைய கருத்தையும் மறுக்கப் போகிறேன்,’ என்பதற்குச் செய்யும் பூர்வ பீடிகை. அங்கே வீடணனை ஏன் ஏற்க வேண்டும் என்று தன் நிலைப்பாட்டை எடுத்துச் சொல்ல வேண்டியது மட்டுமின்றி, ‘அண்ணனை வி ட்டு அகன்று வந்தவன்,’ என்று தன் நிலை உணராது பேசிய சுக்ரீவனுடைய மனம் நோகாமல் அவன் பேசியது தவறு என்பதையும் சுட்ட வேண்டிய கடமையும், பொறுப்பும் இருந்தது மாருதிக்கு. ஏனெனில், அவனன்றோ, இராம-சுக்ரீவ உறவை உருவாக்கியவன்!
தொடர்வேன்…
அன்புடன்
ஹரி கிருஷ்ணன்.